இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க ஜகி வாசுதேவ் முயற்சி: பெ.மணியரசன் கண்டனம்

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க ஜகி வாசுதேவ் முயற்சி: பெ.மணியரசன் கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க ஜகி வாசுதேவ் முயற்சி: பெ.மணியரசன் கண்டனம்

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்கும் ஜகி வாசுதேவின் முயற்சிக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தீர்மானங்களை வலியுறுத்தி பேசிய அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் “ ஜகி வாசுதேவும் வேறு சில ஆதிக்க சக்திகளும் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்து சமய அறநிலையத்துறையைக் கலைக்கக் கோரி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் நிர்வாகங்களிடம் அனுமதி பெறாமல், அத்துமீறி (Trespass) திருக்கோயில்களின் சன்னிதானங்களுக்கு முன்பாக ஆண்கள் – பெண்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள்ளார் ஜகி வாசுதேவ். இது சட்டவிரோதச் செயல். இதற்காக ஜகி வாசுதேவ் மீது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பல்வேறு தெய்வங்கள், பல்வேறு புனித நூல்கள் கொண்ட நம்முடைய மதத்தின் நிர்வாகத்தை ஏதோவொரு தனியார் குழுவிடம் ஒப்படைக்க முடியாது. திருக்கோயில்கள் பெரும்பாலும் பழங்காலத்தில் அரசர்களால் எழுப்பப்பட்டவை. எனவே, இக்கோயில்களை நிர்வாகம் செய்ய தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறை மிகமிகத் தேவை. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத் துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது சூழ்ச்சித் திட்டமாகும். மேலும் தமிழ்நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் அன்றாட பூசைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்

ஜகி வாசுதேவ் மீது சட்டவிரோதமாக மலைகளை ஆக்கிரமித்துவிட்டார் என்ற புகார்கள் இருக்கின்றன. இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu - Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு, ஈஷா மையத்தில் ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை  உரிய மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவற்றை ஜகி வாசுதேவின் ஈஷா நிறுவனம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை என்பதை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

இவை தவிர, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” (Cauvery Calling) என்ற பெயரால் நிதித் திரட்டியதில் மோசடி நடந்திருப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது (Writ Petition No 43414/2019 (GM-PIL)). இவ்வாறு பலவாறான சமய நெறி மீறல்களும், சட்டமீறல்களும் நடத்திவரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தஞ்சையில் வரும் 08.05.2021 அன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை - கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி, ஒருநாள் வேண்டுகோள் உண்ணாப் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com