பெரியபாளையத்தில் பல வருடங்களாக மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டெடுப்பு. காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகே தனியார் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, மண்ணில் இரும்பால் ஆன துருப்பிடித்த பொருள் வெடிகுண்டு போல் இருந்ததால் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். பழங்காலத்தில் ராக்கெட் லாஞ்சர் போன்றவற்றில் பயன்பட்டதாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் வெடிகுண்டுகளை பாதுப்பாக வெடித்து செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்காலைகளில் 13 ஆண்டுகளுக்கு முன் 1628 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு, அவை ராணுவ அதிகாரிகள் முன்னிலையில், ஈகுவார்பாளையம் அடுத்த ராமசந்திரபுரத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் சுமார் 800-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்பட்ட நிலையில், பெரியபாளையம் பகுதியில் சிதைந்த நிலையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.