எல்ஐசி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ரூ. 2.13 கோடி மோசடி: 6 பேர் கைது
எல்ஐசி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ரூ. 2.13 கோடி மோசடி செய்த டெல்லி கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை மந்தவெளி, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதா (67). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘எனது கணவர் இறந்து விட்டார். லைப் இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுவதாக கூறி சிலர் என்னிடம் போனில் தொடர்புகொண்டு பேசினர். இன்சூரன்சில் நான் செலுத்திய பணத்தை முன்தொகையாக செலுத்த வேண்டும் என்று என்னை நம்ப வைத்தனர். என்னிடம் நூதன முறையில் ரூ. 2 கோடியே 13 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்" எனக் கூறியிருந்தார். அந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடித்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் டெல்லியில் பதுங்கியிருப்பது போலீசாரின் புலனாய்வில் தெரியவந்தது.
அதனையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி, துணை ஆணையர் நாகஜோதி மேற்பார்வையில், உதவிக்கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை கடந்த 17ம் தேதியன்று டெல்லிக்கு விரைந்தனர்.
அங்கு பல்வேறு இடங்களில் தங்களுடைய பெயர் மற்றும் விலாசத்தை மறைத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அமன்பிரசாத், பிரதீப்குமார், மனோஜ்குமார், குபீர்சர்மா என்ற பிரின்ஸ், ஹீமன்சு தாஹி, ராம்பால் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அங்குள்ள புதுடெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் டிரான்சிட் வாரண்ட் பெற்று மத்திய குற்றப்பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்