மாவட்ட அளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை செய்யபட்டதை கண்டித்து ஆரணி அருகே நாய்கள் விடும் திருவிழாவை நடத்தி நூதன முறையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செங்கம், போளூர் உள்ளிட்ட 8 இடங்களில் மாவட்ட அளவில் ஜல்லிக்கட்டு காளைவிடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் காளை விடும் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் ஓரு சில இடங்களில் தடையை மீறி காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை காளை விடும் திருவிழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்தும் இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் நூதன முறையில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆரணி அருகே உள்ள காட்டுகாநல்லூர் கிராமத்தில் நாய்கள் விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. காளைவிடும் திருவிழாவை போல் வாடிவாசல் அமைத்து நாய்கள் விடும் திருவிழாவை நடத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசு அளிப்பதாகவும் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர்.
தகவலறிந்து வந்த கண்ணமங்கல போலீசார் உடனடியாக நாய்விடும் திருவிழாவை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.