’தலைவி படத்திற்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன்’ என்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் டப்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் என்றாலே இந்தியாவில், அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க இயக்குநர்கள் படையெடுப்பார்கள். அப்படித்தான், ஏ.எல் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இப்படம், வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் “தலைவி படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட சிறு ஓய்வு கிடைக்கவில்லை. இதைக் குறையாகக் கூறவில்லை. உங்களிடம் பகிர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.