அடுத்தடுத்து ட்விஸ்ட்.. தலைசுற்ற வைக்கும் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்!

அடுத்தடுத்து ட்விஸ்ட்.. தலைசுற்ற வைக்கும் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்!
அடுத்தடுத்து ட்விஸ்ட்.. தலைசுற்ற வைக்கும் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்!

தலையைச் சுற்ற வைக்கும் வழக்கு ஒன்றை 7 ஆண்டுகளாக விசாரித்து, இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, கோவை 5ஆவது கூடுதல் நீதிமன்றம். பல்வேறு திருப்பங்கள் கொண்ட இந்த வழக்கில், கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த அம்மாசை என்ற பெண்தான் தொடக்கப்புள்ளி.

இவர், கோவையில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் ராஜவேலை, ஒரு வழக்கிற்காக அணுகியிருக்கிறார். 2011 நவம்பர் 11ஆம் தேதி ராஜவேலின் அலுவலகத்துக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுதொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை கிடப்பில் போட்டனர் காவல்துறையினர். இப்படியிருக்க, வழக்கறிஞர் ராஜவேலின் மனைவியும், வழக்கறிஞருமான மோகனா, கோவை மாநகர பதிவாளர் அலுவலகத்தில் சொத்து ஆவணத்தைப் பதிவு செய்யச் சென்றிருக்கிறார். ஆனால், மோகனாவின் பெயரில் இறப்புச் சான்றிதழ் இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், அவரின் பெயரில் சொத்து ஆவணங்களைப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

தனது பெயரில் யாரோ போலியாக இறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டதாக, முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மோகனா. இந்த தகவல், அப்போதைய மாநகராட்சி அதிகாரி ஒருவரின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. இறப்புச் சான்றிதழ் விவகாரத்தால் சந்தேகமடைந்த அவர், இதை விசாரிக்குமாறு போத்தனூர் காவல் நிலையத்தில் 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார். விசாரணையில், போலி சான்றிதழ் பெற்றதாக பொன்ராஜ் என்பவரும், ராஜவேலின் கார் ஓட்டுநர் பழனிசாமியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்தான், மூடி மறைக்கப்பட்ட ஒரு கொடூர கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இப்போது மீண்டும் அம்மாசை காணாமல் போன இடத்துக்கு வருவோம். 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்பாக தன்னைச் சந்தித்த அம்மாசையை, வழக்கறிஞர் ராஜவேல் கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக பொன்ராஜ் - பழனிசாமி இருவரும் கூறியுள்ளனர். அதன்பேரில், ராஜவேலுவும், அவரின் மனைவி மோகனாவும் கைது செய்யப்பட்டனர். அம்மாசையை கொலை செய்ததற்கு அவர்கள் புதிய கதை ஒன்றைச் சொல்லியிருக்கின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்திய மோகனா, 12 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒடிசா காவல் துறையின் பிடியும் இறுகியிருக்கிறது. தன்னை காப்பாற்றிக் கொள்ள கணவர் ராஜவேலுவுடன் சேர்ந்து அவர் போட்ட மாஸ்டர் பிளான்தான் இறப்பு சான்றிதழ் விவகாரம். அம்மாசையை கழுத்தை நெரித்துக் கொன்ற ராஜவேல், அவரை தனது மனைவி மோகனா எனக்கூறி போலி சான்றிதழ் பெற்றிருக்கிறார். அம்மாசையின் உடலை மயானத்தில் வைத்து எரித்துவிட்ட ராஜவேல், போலி இறப்புச் சான்றிதழை ஒடிசாவுக்கு கொண்டு சென்றுள்ளார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தனது மனைவி உயிரிழந்து விட்டதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் மோகனாவின் மீதிருந்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்திருக்கிறார் கிரிமினல் வழக்கறிஞர் ராஜவேல். எல்லாம் சரியாகிவிட்டதால், இறப்புச்சான்றிதழ் விவகாரத்தை சரிசெய்துவிடலாம் என மோகனா அடுத்தக்கட்டத்தை நகர்த்தவே  சிக்கியுள்ளார்.

அம்மாசை கொலை வழக்கில் அடுத்தடுத்து ட்விஸ்ட் கிடைத்துக் கொண்டே இருந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திய நீதிமன்றம், முக்கிய குற்றவாளிகளான வழக்கறிஞர்கள் ராஜவேல் - மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலைக்கு உதவிய ஓட்டுநர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியிருக்கிறது, இந்த தீர்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com