
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது.
இதையடுத்து, இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்த நிலையில், மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலாவேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது.
மூன்று மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்தன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வாகனங்கள் மற்றும் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சுனாமி தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இதில் சிக்கி 384 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.