
இதுவரை அவ்வப்போது அரசியல்வாதியாக இருந்த ரஜினி நினைவேந்தல் நிகழ்ச்சியை முழு நேர அரசியல்வாதியாக மாற பயன்படுத்தி உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். கலைஞர் இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை?. கலைஞர் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா? இதைப்பார்த்து மக்கள் வர வேண்டாமா? மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால், நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்” என ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை தான் காட்டுகிறது. தமிழக அரசியல் மற்றும் வரலாறு அவருக்கு தெரியாது. ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது என்றார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? இப்படி பேசிவிட்டு ரஜினிகாந்த் நடமாடி இருக்க முடியுமா ? என வினவினார். இதுவரை அவ்வப்போது அரசியல்வாதியாக இருந்தவர் நினைவேந்தல் நிகழ்ச்சியை முழு நேர அரசியல்வாதியாக மாற பயன்படுத்தி உள்ளார் என விமர்சித்தார். ரஜினிகாந்தின் சந்தர்ப்ப அரசியல் இங்கு எடுபடாது; மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது என்றார்.