
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பரிசீலனை செய்து வருவதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்புகளை நாள்தோறும் சுகாதாரத்துறை செயலாளர் ஃபீலா ராஜேஷ் அறிவித்து வந்தார். இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்புகளை கொடுத்தார். அப்போது கொரோனா குறித்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 911 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பேசிய சண்முகம், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பரிசீலனை செய்து வருவதாக கூறினார். பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்குப் பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் 2ஆம் நிலையில் தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு பரவி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்” என்று அவர் கூறினார்.