ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்

சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.
ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்

சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 30 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

மேலும், வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம், உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தந்தங்களால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. பலத்த காயமடைந்த யானையின் உள்ளுறுப்புகள் சேதமடைந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, யானையின் தலையிலிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள தந்தங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது. உணவு தேடுதலில் ஏற்பட்ட போட்டியினாலோ, பெண் யானையுடன் இனப்பெருக்கத்துக்கான போட்டியிலோ யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கால் தவறி விழுந்து குட்டி, தாய் யானை பலி

இதைபோல அந்தியூர் வனத்துறை பகுதியில் மேலும் இரு யானைகள் பலியாகியுள்ளன. அச்சம்பவத்தின்படி, அந்தியூர் வனத் துறையினர்  தாளக்கரை பீட், தென் பர்கூர் காப்புக்காடு மாரியணை சரகத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப் பகுதியில் பெண் யானை மற்றும் குட்டி யானை அடுத்தடுத்து இறறந்துகிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் முன்னிலையில் உடற்கூராய்வு  செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த தாய் யானைக்கு சுமார் 30 வயதும், குட்டி யானைக்கு சுமார் 2 வயதும் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெண் யானை மற்றும் குட்டி யானையின் உடல்கள் பிற வன உயிரினங்களின் உணவுக்காக அப்படியே விடப்பட்டன. மேடான பகுதியிலிருந்து தவறி விழுந்ததில் யானைகள் உயிரிழந்திருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனப்பகுதியில் 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com