
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா சதமடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் மயாங் அகர்வால் களம் இறங்கினர். உணவு இடைவேளை வரையில் இந்தியா விக்கெட் ஏதும் இன்றி 91 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா 84 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் மீண்டும் களமிறங்கிய ரோகித் 154 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உதவியுடன் தனது 4 வது சதத்தை கடந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். தற்போது விக்கெட் இழப்பு ஏதுமின்றி 202 ரன்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ரோகித் 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.