Published : 21,Jul 2017 04:38 PM
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பும் அடிப்படை உரிமையே: வாட்ஸ் அப் வழக்கில் மத்திய அரசு வாதம்

தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒருபகுதியே என்று வாட்ஸ் அப் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயனாளர்கள் தகவல்களை வாட்ஸ் அப் நிறுவனம், தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அளிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இந்த கருத்தினைப் பதிவு செய்துள்ளது. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் உரிமை என்பது அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதால், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களோ அல்லது சமூகவலைதளங்களோ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் கொள்கை ரீதியிலான முடிவு எடுக்க இருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதார் விவகாரத்தில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு வாதிட்டது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் வழக்கில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ளது.