திரிணாமூல் காங்கிரசுக்கு வாக்களிக்க கம்யூனிஸ்டுகளை அழைக்கும் மம்தா!
மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்த திரிணாமூல் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு இடதுசாரிகளின் ஆதரவாளர்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டுகள் கோலோச்சிய இடதுசாரி முன்னணி அரசை வீழ்த்தியவர் மம்தா பானர்ஜி. 2011ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறிய மம்தா தொடர்ந்து 10 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். ஆனால், மேற்கு வங்கத்தில் ஆட்சியைப்பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயலாற்றி வரும் பாரதிய ஜனதாவால் மம்தாவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்பாடுதான், தன்னால் வீழ்த்தப்பட்ட இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்கும் நிலைக்கு மம்தா சென்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். யாரை வீழ்த்தி ஆட்சியை பிடித்தாரோ அவர்களது ஆதரவையே மம்தா பானர்ஜி நாடியிருப்பது அவரது அரசியல் பயணத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மாநில அரசியலில் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் பாரதிய ஜனதாவை வீழ்த்த ஏற்கனவே எதிர் துருவத்தில் இருக்கும் இடதுசாரிகளின் ஆதரவை மம்தா கோரியிருப்பது அவர் பலவீனமாகிவிட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.