
தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ் சங்க உறுப்பினரை நியமித்தும் டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வரும், கலை, கலாசார மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிஷோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.
தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாசாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழார்வலர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ்சிசோடியா இருவர்க்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.