
தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்றும் சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்
கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ''சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன். திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் பொதுவானது. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஆனால் ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது'' என்றார்.