#TopNews: ’ஜல்லிக்கட்டுக்கு அனுமதி’ முதல் ’தீவிரமடையும் உருமாறிய கொரோனா சோதனை வரை’

#TopNews: ’ஜல்லிக்கட்டுக்கு அனுமதி’ முதல் ’தீவிரமடையும் உருமாறிய கொரோனா சோதனை வரை’
#TopNews: ’ஜல்லிக்கட்டுக்கு அனுமதி’ முதல் ’தீவிரமடையும் உருமாறிய கொரோனா சோதனை வரை’

இன்றைய முக்கிய செய்தித் துளிகளில் சில...

  • பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரிட்டனில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்த 80 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
  • பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் தடுப்பூசிக்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • கொரோனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது 8 மாதங்களுக்கு அந்த வைரஸ் மீண்டும் தாக்காது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விரிவான ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.
  • உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, நோய் பரவலை தடுக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த கட்ட தவணையாக 18 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடக்கி வைக்கிறார். காணொலி மூலம் இந்நிகழ்ச்சி நடைபெறும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் 6 மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடமும் பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் இதில் தலையிட்டு தீர்வு காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.
  • வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பஞ்சாப் மாநிலம் சிங்கு எல்லையில் போராடி வரும் வேளாண் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் அறிவித்துள்ளார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் முன், மத்திய அரசு திறந்த மனதுடன் வரவேண்டும் என்றும் சட்டங்கள் தொடர்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com