
சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான மணீஷ் சிசோடியா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
"உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள், டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நல்லாட்சியை பார்த்து, தங்கள் மாநிலத்திலும் அப்படியொரு நல்லாட்சி அமைய வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டனர். மின்சாரம், நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பணியாற்றியதைபோல் அங்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துங்கள் என்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மீது அம்மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளதை புரிந்து கொண்டோம். மாநில நலனுக்காக பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.
இதை மனதில் வைத்து எங்கள் கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். நான் இரண்டு முறை அம்மாநிலத்திற்கு சென்றுள்ளேன். ஏராளமான மூத்தவர்கள் எங்களுடன் சேர்கின்றனர். மாநில பாஜக அரசு மக்களுக்க்காக எதையும் உருப்படியாக செய்யவில்லை. மக்கள் பூஜ்ஜிய வேலை முதலமைச்சர் என்று கூட அழைக்கிறார்கள் " என்று அவர் கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகவும் காங்கிரசும் பிரதான அரசியல் கட்சிகள் ஆகும். மொத்தம் 70 சட்டமன்ற இடங்களில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு 56 தொகுதிகளும், காங்கிரஸ்க்கு 11 தொகுதிகளும் உள்ளன.