
பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை குடிநீர் பிரச்னை தீரும் என்று தெரிகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி. பருவ மழை பொய்த்ததால் இந்த ஏரிகள் வறண்டு விட்டன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. செம்பரம்பாக்கம் பகுதியில், மழை அளவு 90 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 2.85 அடியாகவும், நீர் இருப்பு 78 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 253 கன அடி நீர், ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சில தினங்களாக தண்ணீர் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் மீண்டும் இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் எடுப்பது தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.