Published : 11,Oct 2020 12:05 PM
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் - கே.என்.நேரு

மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கான, தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விட்டோம் என்று கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார்.
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.கவின் செயற்குழு கூட்டம், தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தி.மு.க.வின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்" திருச்சியில் முப்பெரும் விழா நடத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் இசைவு தந்துள்ளார். அந்த விழாவில் திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ஒவ்வொரு இயக்கமும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதேபோல ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம். அதற்கான ஒரு முன்னோட்ட கூட்டம் தான் இது. கடலூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது போன்ற செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
உள்ளாட்சி தேர்தலே நடத்த முடியாமல் இருந்த இடங்களில், ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது தான் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நான்கு ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என கூறினார்