காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்... 40 நாளே ஆன குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்... 40 நாளே ஆன குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்... 40 நாளே ஆன குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

பிறந்து 40 நாளே ஆன பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (25). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருவல்லம் பாச்சலூர் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது காதலாக மலர்ந்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.   


இதையடுத்து அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள உன்னிகிருஷ்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் வீட்டார் திருவல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை விசாரித்த போலீசார் சமரசம் செய்து உன்னிகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் செய்துவைத்தனர்.

இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. கேரள வழக்கப்படி குழந்தைக்கு பாச்சலூரில் உள்ள பெண் வீட்டில் வியாழக்கிழமை நூல் கட்டும் வைபோகம் நடந்தது. நிகழ்ச்சிக்குப்பின், மாலை உன்னிகிருஷ்ணன் தனது குழந்தையை பெற்றோரிடம் காண்பிப்பதற்காக எடுத்துச் சென்ற நிலையில் நெடுநேரமாகியும் குழந்தையை உன்னிகிருஷ்ணன் திரும்பக் கொண்டு வரவில்லை. மொபைல் போனில் குழந்தையின் தாயார் அழைத்தும் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் உன்னிகிருஷ்ணன் குழந்தையை கொன்று அதை நெகிழி கவரில் வைத்து பாச்சலூர் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இன்று காலை மூன்று மணிநேர தேடுதலுக்குப்பின் குழந்தையின் உயிரற்ற உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உன்னிகிருஷ்ணனை கைதுசெய்த திருவல்லம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காதல் மனைவியிடம் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகறாறு ஏற்பட்டதாகவும் அதனால் குழந்தையை கொன்றதாகவும் உன்னிகிருஷ்ணனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com