நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

போதைபொருள்  வழக்கில் நடிகை ரியாவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

முன்னதாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளையில் சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவரின் செல்போன் உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக என்சிபி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இரண்டு நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கடந்த செவ்வாய் அன்று விசாரணைக்கு ஆஜரான ரியாவை அதிகாரிகள் கைது செய்து என்சிபி அலுவலக சிறையில் அடைத்தனர்.

மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக புதன்கிழமை ரியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ரியாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், ரியாவிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரியா, பைகுல்லா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரியாவின் வழக்கறிஞர் மீண்டும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், ரியாவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகவும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் ரியா தனது ஜாமீன் மனுவில் தெரிவித்து இருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com