Published : 24,Aug 2020 04:51 PM
ரவுடிகள் மீது காட்டும்அக்கறையை போலீசார் கொல்லப்படும்போது ஏன் காட்டுவதில்லை? உயர்நீதிமன்றம்

ரவுடிகள் இறக்க நேரிடும்போது காட்டும் அக்கறையை காவல்துறையினர் மீது ஏன் காட்டுவதில்லை என்று மனித உரிமை ஆணையங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்களையும், அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க டி.ஜி.பி.க்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்தனர்.
மேலும், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டதால் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன் ? என்றும் அரசைப் போல, அரசியல் கட்சிகளும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு முன் நின்று உதவ வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.