
தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதலை தூண்டும் வகையில் வாட்ஸ்-அப்பில் ஆடியோ வெளியிட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் கல்ராமன் என்ற வேல்முருகன் (30). இவர் சில தினங்களுக்கு முன், ஒரு தனியார் கல்லூரி, தங்கள் சமூகத்தை சேர்ந்தது என்றும், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வரக்கூடாது என்றும் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் பரப்பி விட்டிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு கல்ராமன் என்ற வேல்முருகன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
பின் தூத்துக்குடி எஸ்.பி. பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வேல்முருகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.