’இது ஒரு பயங்கரமான சட்ட வரைவு ‘ - EIA 2020-ஐ திரும்ப பெறக்கோரி நடிகை பார்வதி கடிதம்

’இது ஒரு பயங்கரமான சட்ட வரைவு ‘ - EIA 2020-ஐ திரும்ப பெறக்கோரி நடிகை பார்வதி கடிதம்
’இது ஒரு பயங்கரமான சட்ட வரைவு ‘ - EIA 2020-ஐ திரும்ப பெறக்கோரி நடிகை பார்வதி கடிதம்

பிரபல தென்னிந்திய நடிகை பார்வதி திருவோத்து, ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’ குறித்த தனது ஆட்சேபனைகளை கடிதத்தில் குறிப்பிட்டு, அதனை உடனே திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் சட்ட வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதால் பெரும்பாலான இந்தியர்களுக்கு சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைவு இஐஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 11 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இதனிடையே சுற்றுச்சூழலை மாசுபடுத்த அரசாங்கம் ‘இலவச உரிமம்’ வழங்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து பார்வதி மத்திய அரசுக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில், அறிவிப்பில் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாக கூறிவிட்டு, பெரும்பாலானவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத இரண்டே மொழிகளில் மட்டும் வரைவு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். மேலும் பெரும்பாலான தகவல் தொடர்புகள் இந்த தொற்றுநோயால் செயலிழந்து இருக்கும்போது, தாங்கள் வாழ்வது பற்றியே கேள்விக்குறியாக இருக்கும்போது இதில் கவனம் செலுத்தமுடியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு இந்தியாவின் அனைத்து மக்கள் நலனில் அக்கறை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சட்டம் இயற்றுவது வெறும் சடங்கா? என்று கேள்வியெழுப்பி உள்ள பார்வதி, பயங்கரமான இந்த சட்டம் சுற்றுச்சூழலையும் காடுகளையும் அழித்து மனித உரிமைகளை கேலிசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமாக தொழில் செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் முறையான சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு பொருந்தும் வகையில் இயக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மக்களுக்கு அவரவர் மொழியே கவுரவம். அரசாங்கம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டதைப் போலவே இதையெல்லாம் மலையாளத்தில் எழுதியிருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தந்த மக்களுக்கு புரியும் மொழியில் வெளியிடவேண்டும் என அரசாங்கத்திற்கு தெரியவில்லையா? டெல்லி, கர்நாடகா மற்றும் சென்னை உயர்நீதி மன்றங்களின் உத்தரவு இருந்தபோதும் ஏன் அவ்வாறு செய்யபடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com