Published : 28,Jul 2020 03:44 PM
"உலக புலிகளின் எண்ணிக்கையில் 70% இந்தியாவில்தான் இருக்கிறது" பிரகாஷ் ஜவடேகர்

உலகத்தில் இருக்கும் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிதம் இந்தியாவில் இருக்கிறது என்று மத்தியச் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி "இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2020" மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரால் இன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அவர் "இந்தியாவின் சொத்துகள் புலிகள், அவற்றால் நாடு பெருமையடைகிறது. உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிதம் இந்தியக் காடுகளில் இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் 13 புலிகள் காப்பகங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "சர்வதேச அளவில் நமக்கு நிறைய அதிகாரங்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பலம் அதன் விலங்குகள். இந்தியாவில் 30 ஆயிரம் யானைகள், 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், 500 சிங்கள் இருக்கிறது. நம்மிடம் ஏராளமான இயற்கை வளம் இருக்கிறது. அபூர்வ மரங்கள், செடிகள் நிறைந்தது இந்தியக் காடுகள். இப்போது நாம் அதனை மேலும் மேம்படுத்திக்கொண்டு இருக்கிறோம்" என்றார் பிரகாஷ் ஜவடேகர்.