
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரியாணி, பரோட்டா வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் இலவசமாக வழங்கி தனியார் உணவகம் ஒன்று அசத்தி வருகிறது.
சென்னையை தொடர்ந்து தற்போது மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இதுவரை 8000க்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் மதுரை உள்ளது. மதுரையில் கொரானாவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தனது உணவகம் மூலம் மாவட்டத்தில் கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நவநீதன். மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கே.கே.நகர், அழகரடி, முடக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் 50 வருடத்தை கடந்தும் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பரோட்டா, பிரியாணி, கிரில் சிக்கன் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை இலவசமாக வழங்கி அசத்தி வருகிறார் உரிமையாளர் நவநீதன்.
குறிப்பாக தனது உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு, முதலில் அவர்களுக்கு கபசுரக்குடிநீரும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிரியாணி வாங்கும் அனைவருக்கும் கிருமிநாசினி பாட்டில் மற்றும் ஆலோபதி மருந்தான ஆல்சனாகா ஆல்பம் வழங்கப்படுகிறது. அதனைப்போல பரோட்டா, கிரில் சிக்கன், தந்தூரி போன்றவற்றை வாங்கும் வாடிக்கையளர்களுக்கு முகக்கவசம் மற்றும் 2 கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. தனது உணவகத்தில் முகக்கவசம் மற்றும் சானிடைசர், அலோபதி மருந்துகளை இலவசமாக வழங்கினாலும் எந்த உணவுப்பொருட்களின் விலையையும் ஏற்றியதில்லை எனவும், தான் அரசின் அறிவுரைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இதனை செய்து வருவதாகவும் நவநீதன் தெரிவித்தார்.
மேலும், “கிட்டத்தட்ட எனது நான்கு கிளைகளிலும் 50,000 வரை சொந்தப்பணத்தை செலவு செய்து முக்கவசம், கிருமிநாசினி, ஆலோபதி மருந்துகளை வாங்கி அதனை உணவுப்பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக கொடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.