
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை தேடி இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையை மீற முயன்ற சித்திக் மொஹம்மத் ஷிசான் என்கிற 20 வயது இளைஞரை எல்லை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொஹம்மத் சித்திக் என்பவர் தனது மகனான சித்திக் மொஹம்மத் ஷிசானை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநில போலீசார் ஷிசானின் மொபைல் லொகேஷன் இந்தியா – பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராமத்தை காட்டியுள்ளது. அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
குஜராத்தின் ரன் ஒஃப் கட்ச் வழியாக ஷிசான் பாகிஸ்தான் அடைய திட்டமிட்டுள்ளார். எல்லை பகுதியை நெருங்கும் முன்பு, அவர் விட்டுச்சென்ற அவரது பைக்கை பார்க் எனுமிடத்தில் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாக ரன் பகுதியில் வறட்சியால் சோர்வடைந்து பாதிக்கப்பட்டு சுய நினைவுயின்றி 2 மணி நேரம் நேரம் இருந்துள்ளார். கிட்டத்தட்ட 1,200 கி.மீ பயணம் செய்து அப்பகுதிக்குச் சென்றுள்ளார். ஷிசானை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த பி.எஸ்.எப் வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர் .
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் தான் பாகிஸ்தான் செல்ல முயன்றதாகவும் கூகுள் மேப் உதவியினால் இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.