
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திமுக நிர்வாகிகளின் பெயர் இடம்பெற்றதையடுத்து அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நயினார் குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இதனையடுத்து சசிகலா என்ற அந்த பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதில் குற்றம்சாட்டப்படும் ஒருவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி என்று தெரிகிறது. இதனால், இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசு பொருளானாது.
இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன் மற்றும் டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்" என அறிவித்துள்ளார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “"செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும்” என தெரிவித்து இருந்தார்.