Published : 23,Jun 2020 11:01 AM
தூத்துக்குடி தந்தை-மகன் உயிரிழப்பை கொலை வழக்காக பதிய வேண்டும் - டிடிவி தினகரன்

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள, “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 23, 2020
காவல்துறையினர் தாக்கியதால்தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வணிகர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடி வணிகர்களான தந்தை-மகன் சந்தேக மரணம் தொடர்பாக காரணமான காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் திமுக எம்பி கனிமொழி புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி, “வணிகர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.