Published : 20,Jun 2017 12:02 PM
சாமியாரின் உறுப்பை துண்டித்த மாணவி கடத்தல் - காதலன் புகார்

கேரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த மாணவியை அவரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக மாணவியின் காதலன் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட வழக்கில் அடித்தடுத்து அதிரடி திருப்பம் உருவாகி வருகிறது. சாமியாரின் உறுப்பை நான் வெட்டவில்லை, காவல்துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியதுதான் நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது சாமியாரின் ஆணுறுப்பை மாணவி அறுத்து எறிந்தார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாணவியின் செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது ஆணுறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.