
தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமனின் அசத்தல் சதத்தின் உதவியுடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவித்தது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமன் மற்றும் அசார் அலி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 128 ரன்கள் குவித்தது. அசார் அலி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜமனுடன் கைகோர்த்த பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஜமன், 92 பந்துகளில் சதத்தினை பதிவு செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஃபகர் ஜமன் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். மேலும், இந்திய அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே ஜமன், சதமடித்து அசத்தினார். அவர் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை அடுத்து 46 ரன்களில் பாபர் அசமும், 12 ரன்களுடன் சோயப் மாலிக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹபீஸ் - இமாத் வாசிம் ஜோடி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஹபீஸ் 57 ரன்களுடனும், இமாத் வாசிம் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு இரட்டையர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.