
காவல் உதவி ஆய்வாளர் சந்தேகத்தின்பேரில் விரட்டியபோது, பால் கறக்கும் தொழிலாளி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டி, வடக்கு தெருவை சேர்ந்த பரமன் மகன் அருண்பாண்டி. மஞ்சளாறு அணைப்பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் மாடுகள் வைத்து வளர்த்து பால்கறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது தோட்டத்தில் இருந்து தேவதனபட்டி வீட்டிற்கு அருண்பாண்டி என்ற இளைஞரும் அவரது உறவினரும் வந்துள்ளனர். அப்போது அந்த வழியில் ரோந்து பணியில் சென்ற தேவதானபட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகுராஜா அவர்களை மறித்து நீங்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறீர்கள் எனக் கூறி அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினரிடம் சிக்கினால் வழக்கு பதிவு செய்துவிடுவார்கள் என்கிற பயத்தில் தப்பி ஓடியுள்ளனர். உதவி ஆய்வாளர் அவர்களை விரட்டவே தென்னந்தோப்பில் உள்ள தடுப்பு சுவர் இல்லாத கிணற்றில் அருண்பாண்டி தவறி விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவல்துறை உதவி ஆய்வாளர் விரட்டியதே அருண்பாண்டி இறப்பதற்கு காரணம் எனக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100க்கும் மேற்பட்டோர் தேவதனபட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.