Published : 16,Jun 2017 06:01 AM
மத்திய அரசுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்!

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக, புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத் தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராகப் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக, புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேறியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கையை திரும்பக் கோரி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக மேகாலயா, கேரளா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.