குழந்தைகளுக்கான தடுப்பூசியில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை- சுகாதாரத் துறை விளக்கம்
குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியில் தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதையடுத்து அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்குப் தடுப்பூசி போடும் பணியானது கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.

இதற்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் “தடுப்பூசிகள் போடும் பணியானது எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது. மத்திய சுகாதாரத் துறையிலிருந்து வரும் தடுப்பூசிகள் அதே எண்ணிக்கையில் வழக்கம்போல் வந்து கொண்டிருக்கின்றன. அதில் எந்தத் தடையும் இல்லை. ஆதலால் பொதுமக்கள் எந்த ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அங்கேயே சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.