
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த 96 மணி நேரத்தில் இந்திய வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரம்ஜான் மாதத்தையொட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல்கள் இருப்பதால், இந்திய படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவ முயலும் பயங்கரவாத அமைப்பினரின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், வீரர்கள் மேற்கொண்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கடந்த 96 மணி நேரத்தில், குரேஸ், லோக், மச்சில், நவ்காம் மற்றும் உரி உள்ளிட்ட பகுதிகளில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.