Published : 02,Mar 2020 06:54 AM
டெல்லி வன்முறை: உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக சிலர் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோர நிலையை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது அமைதியை காண தொடங்கியுள்ளன.
மேகாலயா தலைநகரிலும் வன்முறை : 3 பேர் பலி
பதட்டம் நிறைந்த பகுதிகள் அனைத்திலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இதுவரை 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் அனைத்து பகுதிகளும் கட்டுப்பாட்டில் இருப்பதால் வன்முறை நிகழ்வதாக வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.
கதாநாயகனாக கிருஷ்ணா.. தமிழில் ரீமேக் ஆகும் ‘பெல் பாட்டம்’!
இதனிடையே வன்முறையால் சேதமான பகுதிகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு இடமாக சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியதோடு சேதவிவரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் இயல்பு நிலை மிக வேகமாக திரும்பி வருவதாக அம்மாநில காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய அவர், கடந்த 60 மணி நேரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.