மறுபடியும் வந்தார் தினகரன்... ஜாமீன் வருகை எழுப்பும் கேள்விகள்

மறுபடியும் வந்தார் தினகரன்... ஜாமீன் வருகை எழுப்பும் கேள்விகள்
மறுபடியும் வந்தார் தினகரன்... ஜாமீன் வருகை எழுப்பும் கேள்விகள்

கட்சியில் மீண்டும் இணைந்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு 'நான் எப்போது விலகினேன்.. கட்சியில்தானே இருக்கிறேன்' என்று கூறிவிட்டார் டிடிவி தினகரன்.

இரட்டை இலைச் சின்ன வழக்கில் அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பு, 'நான் வேண்டுமானால் ஒதுங்கிக் கொள்கிறேன்' என்று சொன்னார். தற்போது 'நான் விலகவில்லை' என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல. தன்னை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது என்றும் கூறி டிடிவி தினகரன் மீண்டும் தனது அரசியல் செயல்பாடுகளை அழுத்தம் திருத்தமாகவே ஆரம்பித்திருக்கிறார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு... அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததற்குப் பிறகு, ஓபிஎஸ் அணி வைத்த... இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரே கோரிக்கை.... சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சிக்குள்ளேயோ, ஆட்சியிலேயோ இருக்கக் கூடாது என்பதுதான். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் இணைப்பைப் பற்றிப் பேசுவோம் என்று சொன்னார்கள்.
நிபந்தனையை ஏற்றுக் கொள்வதைப் போலத்தான் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சசிகலாவின் பேனர் கூட அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குங்கள்... சசிகலாவை நீக்குங்கள் என்ற நிபந்தனைகளுக்கு அவர்கள் சரி என்றும் சொல்லவில்லை. மாட்டோம் என்றும் சொல்லவில்லை. ஆனால் இணையத் தயாராக இருக்கிறோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றெல்லாம் சொன்னார்கள். இதற்கிடையில் நாஞ்சில் சம்பத், பெங்களூரைச் சேர்ந்த புகழேந்தி போன்றவர்கள் நேரடியாக தினகரனையும், சசிகலாவையும் ஆதரித்து தாங்கள் எந்த அணியும் இல்லை. நேரடியாக தினகரன் அணி என்று நிரூபித்தனர். மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்து, அதில் புகழேந்தி பேசியது அதிமுக மூன்றாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுப்பியது. 

இப்போது ஜாமினில் வெளியே வந்த தினகரன் என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கவில்லை என்று சொன்னார். சிறையில் இருந்த காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது என்றும் சொல்லி விட்டார். தினகரன் இப்போது வரையில் துணைப் பொதுச் செயலாளர்தான். அவரை யாரும் அதிகாரப்பூர்வமாக நீக்கவில்லை. என்ன வழக்குக்காக சிறைக்குச் சென்றாலும், அவர் வெளியே வரும் போது அவரை வரவேற்கப்போவது வழமை. ஆனால் அதிமுக அம்மா அணியில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் இருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் ஜிஎஸ்டி கூட்டத்தில் இருந்தார். அமைச்சர் செங்கோட்டையன் திருத்தணியில் இருந்தார். இவர்கள் தவிர முக்கியமான அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயக்குமார் உட்பட ஒரு அமைச்சர் கூட தினகரனை வரவேற்கவோ அவரைப் பார்க்கவோ செல்லவில்லை. ஆனால் எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உட்பட 8 எம்எல்ஏக்கள் தினகரனைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமான தினகரன் எதிர்ப்பாளர்கள். ஆனால் பழனிச்சாமி அணியில் இருப்பவர்களில் தினகரனுக்கு ஆதரவானவர்களும் இருக்கிறார்கள். ஆதரவா எதிர்ப்பா எனத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள்.

ஒதுங்கிக் கொள்வதாகச் சொன்ன தினகரன், நான் எப்போது விலகினேன் என்று கேட்டது குறித்து ஆளுக்கொரு விதமாகக் கருத்துச் சொல்லியிருக்கின்றனர். இதைப் பற்றி திருத்தணியில் இருந்த அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் அரசியலில் ஈடுபடுவது குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்று கூறியிருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் அரசியலில் ஈடுபடுவது பற்றி கட்சியின் வழிநடத்தும் குழு முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினகரன் கட்சிப் பணியாற்ற உரிமை உள்ளது என்று சொல்லியிருக்கிறார். இந்தக் குழப்பத்திற்கு இடையே நிறையக் கேள்விகள் எழுகின்றன. தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி செயல்படப் போகிறாரா?. அல்லது ஓபிஎஸ் எப்படி சசிகலாவைக் கண்டு கொள்ளாமல் ஆட்சி நடத்தினாரோ அப்படி ஆட்சி நடத்தப் போகிறாரா?. தினகரனைத் தீவிரமாக ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் மறுபடியும் தினகரன்தான் முதலமைச்சர் என்று சொல்லப் போகிறார்களா? இதை எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா?. அப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவரது அமைச்சரவையில் இருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மேலும் பிரிந்து தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சி என்ன ஆகும்?. ஏற்கனவே மத்திய பாஜக இங்குள்ள ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை எதிர்த்துப் பெரிதாக எதுவும் பேசாததால், அவர்களும் இருந்து விட்டுப் போகட்டுமே என்று மத்திய அரசு விட்டு விட்டது என்று பேச்சு எழுந்தது.

தற்போது தினகரன் வந்திருக்கிறார். தினகரன் மத்திய அரசை அனுசரித்துப் போகாததாலும் அவர் ஒரு தனி அதிகார மையமாக தமிழகத்தில் ஆகி விடுவார் என்றும் அஞ்சியதால்தான் பாஜக அவர் மீது வழக்குகளைப் போட்டு முடக்கியது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. தினகரன் கைதுக்கு காரணம் டெல்லி டெல்லி டெல்லி என்று நாஞ்சில் சம்பத் மூன்று முறை முழங்கக் கூடச் செய்தார். தற்போது வெளியே வந்த தினகரனிடம் மத்திய அரசு, மாநில அரசை அடிபணிய வைப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, யாரும் , யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றார். அதே சமயத்தில் மத்திய அரசுடன் நட்பு ரீதியாகத்தான் செல்வோம் என்றும் கூறியிருக்கிறார் தினகரன். இப்போது என்ன நடக்கும்?. தினகரன் மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்வாரா? அல்லது அவரும் வம்பு வேண்டாம் என்று அடங்கிப் போவாரா?. தினகரனின் ஜாமீன் வருகை இப்படிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் பேசிய தினகரன், அதிமுகவில் வெறும் தொண்டனாக இருந்து செயல்படுவேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com