
புதுச்சேரியில் வங்கி அதிகாரி வீட்டில் 90 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிச்சி நகரைச் சேர்ந்த ஜெயலசீலன். கடந்த 27-ஆம் தேதி இவரது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 90 பவுன் நகைகள் காணாமல் போனது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வீட்டின் கதவு உடைக்கப்படாமல், அலமாரி உடைக்கப்படாமல் நகை திருடு போயிருந்ததால் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர்.
அதன்படி ஜெயசீலனின் மகன் தீபக்கின் நண்பர்கள் யார்? யார் வீட்டிற்கு அதிகமாக வந்து செல்கின்றனர் என போலீசார் விசாரித்தனர். அப்போது தீபக்கின் நண்பர் திலிப்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களோடு சேர்ந்து நகைகளைத் திருடியது தெரிய வந்தது. மேலும் அந்நகைகளை அடகு வைத்து கோவா, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸார் திலிப்குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.2.25 லட்சம் ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.