
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடை கோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு, பதிலளிக்க இயக்குநர் கௌதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல்விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கெளதவ் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை "குயின்" என்ற இணையதள தொடராக தயாரித்து வருகிறார். அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
இதற்கு தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தலைவி’ படத்தை திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது. ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என ஜெ.தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.