
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் ஓராண்டு பதவிக்காலம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைகிறது. பயிற்சியாளராக நீடிக்க கும்ப்ளே விருப்பம் தெரிவித்தாலும், ஊதிய உயர்வு தொடர்பாக அவர் விடுத்த கோரிக்கையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கும்ப்ளேவின் விண்ணப்பம் நேரடியாக ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்ப்ளேவுக்கு பதிலாக இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை பிசிசிஐ தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவலை விரேந்திர சேவாக் இதுவரை உறுதிசெய்யவில்லை. அதேநேரம் இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவே தொடர முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ நிர்வாகிகள் குழு நேர்காணல் நடத்த உள்ளது. பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ராகுல் ஜோரி தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு மேற்பார்வை செய்யும்.