Published : 22,Sep 2019 07:26 AM
“இப்படி ஒரு காவல் ஆய்வாளரா?” - பாராட்டு மழையால் நனைத்த மக்கள்

ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையை தனி ஆளாக சீரமைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, புதைவட மின்சார கேபிள், குடிநீர் திட்டம் என பல பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளரான தனசேகரன் அரசு மருத்துவமனை அருகே சேதமுற்றிருந்த சாலையை தனி ஆளாக மண்வெட்டியைக் கொண்டு சீரமைத்தார். இந்தக் காட்சிகளை படம்பிடித்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்ற சாலையில் சிக்கி தாமதமாவதைத் தவிர்க்கவே, சாலையை சீரமைத்ததாக அவர் கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் தனசேகரனின் சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.