வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.40 லட்சம்: திருப்பித் தராத தம்பதிக்கு சிறை தண்டனை

வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.40 லட்சம்: திருப்பித் தராத தம்பதிக்கு சிறை தண்டனை
வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.40 லட்சம்: திருப்பித் தராத தம்பதிக்கு சிறை தண்டனை

வங்கிக்கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.40 லட்சத்தை செலவு செய்த தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் திருப்பூர் கார்ப்ரேஷன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். 2012ம் ஆண்டு இவரது வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. பொதுப்பணித் துறைக்கு செல்ல வேண்டிய பணம் தவறுதலாக குணசேகரன் கணக்குக்கு சென்றது. 

இதனை 8 மாதங்களாக கவனிக்காத பொதுப்பணித்துறை பின்னரே தங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வங்கியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் பணம் வேறொருவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

உடனடியாக குணசேகரனை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பித்தரக்கோரி கூறியுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பியளிக்காத குணசேகரன் அந்த பணத்தைக் கொண்டு சொத்துகளை வாங்கியுள்ளார். இதனை அடுத்து 2015ம் ஆண்டு குணசேகரன் மற்றும் அவரது மனைவி ராதா மீது கார்ப்ரேசன் வங்கியின் உதவி பொது மேலாளர் நரசிம்மகினி, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம்  புகார் அளித்தார். 

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குணசேகரன் மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com