Published : 04,Sep 2019 11:49 AM
கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், எம்.பி.கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஏ.சந்தான குமார் என்பவர் தொடர்ந்துள்ள தேர்தல் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி, போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு தொடர உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரது கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு எனவும், எனவே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு குறித்து கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். ஏற்கெனவே பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.