
திருமணம் நடப்பதற்குள் தந்தை இறந்ததால் மனம் உடைந்த மகன், அவரது உடலின் முன் திருமணம்செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி என்பவரின் மகன் அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரி என்ற பெண்ணுக்கும் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண வேலைகளில் இரு வீட்டாரும் ஈடுபட்டிருந்த நிலையில், அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி, உடல்நலக்குறைவால் திடீரென காலமானார்.
பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடக்கும் என்று விரும்பிக்கொண்டிருந்த அலெக்சாண்டர், தந்தையின் மறைவால் மனமுடைந்தார். ஆனாலும், தந்தை கையால் தாலி தொட்டுத்தரவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இதனை தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பெண் வீட்டாருக்கும் தகவல் தரப்பட்டு, அவர்களும் ஒப்புக்கொண்டதால், பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தனர்.
உயிரிழந்த தெய்வமணி முன்னிலையில், அவரது மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. தந்தையின் கையால் தொட்டு மாங்கல்யத்தை பெற்ற அலெக்சாண்டர், கண்ணீருடன் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். இவரின் தந்தை பாசம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.