
சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இந்தச் சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜூலை மாதம் 24ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “இந்த மசோதாவினால் அரசு யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று குறிப்பிடலாம். ஏனென்றால் இதற்கு வழக்கோ அல்லது குற்றப்பத்திரிகையோ, நீதிமன்றத்தின் அனுமதியோ தேவையில்லை. இதற்கு வெறும் அரசின் ஒப்புதல் மட்டும் போதும். இது மிகவும் ஆபத்தானது. அத்துடன் சட்டவிரோத செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் ஏற்கெனவே இந்தச் சட்டத்தின் கீழ் வருவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,“இந்த மசோதாவின் மூலம் யார் பயங்கரவாத செயலில் ஈடுபடுகிறாரோ அல்லது பயங்கரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்படுவார்கள். அத்துடன் பயங்கரவாத செயல்கள் தொடர்பாக என்.ஐ.ஏ இதுவரை 278 வழக்குகள் விசாரித்துள்ளது. அவற்றில் 204 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 வழக்குகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் என்.ஐ.ஏவின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது” எனக் கூறினார்.
இதனையடுத்து இந்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் 147 பேர் ஆதரவாகவும் 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.