உன்னாலதான் எங்க பொண்ணு இறந்தாள்: காதலனை வெட்டிச் சாய்த்த கும்பல்!

உன்னாலதான் எங்க பொண்ணு இறந்தாள்: காதலனை வெட்டிச் சாய்த்த கும்பல்!
உன்னாலதான் எங்க பொண்ணு இறந்தாள்: காதலனை வெட்டிச் சாய்த்த கும்பல்!

இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வண்டியில் அழைத்துச் சென்ற காதலனே, இறப்புக்குக் காரணம் எனக்கூறி, அவரை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள பருக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். பிளம்பர் . இவரும் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சரோஜினி தேவியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி பார்த்திபனும், சரோஜினியும் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சரோஜினி அணிந்திருந்த துப்பட்டா, வண்டியின் பின் சக்கரத்தில் சிக்கியதால், அவர் கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த நான்காம் தேதி உயிரிழந்தார். இத்தகைய சூழலில், சரோஜினிதேவியின் உயிரிழப்புக்கு பார்த்திபனே காரணம் என்று கருதி அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்ததால், பார்த்திபன் மதுரைக்கு தப்பியோடினார்.

சில நாட்கள் அங்கிருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பேசலாம் என்று சரோஜினிதேவியின் உறவினர்கள் அழைத்ததால், பார்த்திபன் ஊர் திரும்பினார். பார்த்திபனை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பரந்தாமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருக்கல் நோக்கிச் சென்றார்.

அப்போது திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத ஐந்து பேர், பார்த்திபனை கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். பரந்தாமன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, பார்த்திபன் குருதி வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அந்தக் கும்பல் தப்பியோடிய நிலையில், சரோஜினியின் உறவினர்கள்தான் பார்த்திபனைக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

பார்த்திபன் கொலை தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மரக்காணத்தைச் சேர்ந்த மூவரைப் பிடித்து விசாரித்துவிட்டு பின்னர் விடுவித்தனர் - கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது - ஆனால், சரோஜினிதேவியின் சகோதரி கணவர் மதன்குமார் என்பவர்தான் ஆட்களை ஏவி பார்த்திபனைக் கொன்றதாக சம்பவத்தின் போது அருகிலிருந்த அவரது சகோதரர் பரந்தாமன் கூறுகிறார் - இதனால் மதன்குமாரைப் விசாரணைக்கு உட்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com