Published : 29,Jul 2019 05:48 AM
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும், நிதி மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தொடக்கத்தில் பேரவையில் எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் தொடங்கிய நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதில் தேவையான பெரும்பான்மையை எட்டி தன்னுடைய முதலமைச்சர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார்.
இதனிடையே, கர்நாடகப் பேரவையை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 30 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு காவல் துறை ஆணையிட்டுள்ளது.