Published : 17,Jul 2019 08:39 AM
“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான அரசு நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை தொட்டுள்ளது. தங்களின் ராஜினாமா முடிவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரும் 15 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
அதில் எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் தனது முடிவை குறித்த காலவரையறைக்குள் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் கலந்து கொள்ளவோ, தவிர்க்கவோ அவர்களை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இவ்விவகாரத்தில் அரசமைப்புச் சட்ட சமநிலை பராமரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ராஜினாமா முடிவில் தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வர உள்ளார். தற்போதைய நிலையில் 224 பேர் கொண்ட கர்நாடக பேரவையில் ஆளும் கூட்டணியின் பலம் 117 ஆகவும் பாஜக மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களின் பலம் 107 ஆகும். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பங்கேற்காத சூழலில், அதன் பலம் 102 ஆக குறைந்து விடும். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.