Published : 13,Jul 2019 02:06 AM
பண மோசடி புகார்: நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுப்பு

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தன் மீதான மோசடி புகாரை மறுத்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினி காந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, டெல்லியில் நடந்த’இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தாராம்.
அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.24 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ’ஆனால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வர அவர் மறுத்துவிட்டார். இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை’ என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுத்தனர். போலீசார், சோனாக்ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக சோனாக்ஷி சின்ஹாவை விசாரிக்க மும்பையில் உள்ள அவர் இல்லத்திற்கு உத்தரப்பிர தேச காவல் துறையினர் நேற்று முன் தினம் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இந்நிலையில் தன் மீதான புகாரை சோனாக்ஷி மறுத்துள்ளார். யாரோ ஒருவர் கூறும் அபாண்டமான புகாரை நம்பாதீர்கள் என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல்துறைக்கு முழு ஒத்து ழைப்பு தரத் தயாராக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.