Published : 11,May 2017 05:25 AM

தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீசிய கும்பல்! புதுவையில் பயங்கரம்

pondicherry-murder

புதுச்சேரியில் 17 வயது சிறுவனை கொலை செய்த நபர்கள், அவனது தலையை காவல் நிலையத்தில் வீசிச் சென்றச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவேதன் (வயது 17). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த சுவேதன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் பாகூர் ஏரிக்கரை அருகே நேற்றிரவு சுவேதன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி தலையை தேடினர். அப்போது, வெட்டப்பட்ட தலையை புதுச்சேரி எல்லையில் இருக்கும் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் ஒரு கும்பல் வீசிச் சென்றது தெரியவந்தது.

புதுச்சேரி காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சுவேதன் உடலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பாக வினோத், தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்